நேபாளத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 404 பேரில் 338 பேர் பாதுகாப்புடன் மீட்பு!
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பற்றி..
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 404 பேரில், 338 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 26-ல் திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது. மலைப் பகுதியிலிருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்குச் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோரத் தாண்டவம் பல கிராமங்கள் உருக்குலைந்தன.
தொடர்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமை மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதுவரை பெருவெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 628 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 404 பேரில் 338 பேருடன் அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசினர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். இவர்களில் 37 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ரிச்சா டுர்ஸ் மூலம் நேபாளத்திற்குச் சென்ற 60 சுற்றுலாப் பயணிகளை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
சீனா/திபெத் பகுதியில் தற்போது பாதுகாப்பாக உள்ள, மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 149 இந்தியர்களின் பட்டியலை வெளியுறவு அமைச்சகம் மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.
அடையாளம் காண்பதற்கும் அடுத்தகட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும் அந்தப் பட்டியலை அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளது.
நேபாள-திபெத் பகுதியில் சிக்கியிருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 404 பேரில், 37 பேர் கொண்ட குழுவினர் சாகா (திபெத்) பகுதியிலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
நாக்பூரைச் சேர்ந்த 105 பேர் ஏற்கெனவே இந்தியா திரும்பிவிட்டனர். பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட 404 பேரில் இவர்களும் அடங்குவர்.
மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம், வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட பட்டியல்களை அனுப்பி வருகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் தேவைக்கேற்ப மீட்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. அதேவேளையில், காணாமல் போன மக்களைக் கண்டறியும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட அதிகாரிகள் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல்களைச் சரிபார்த்து வருகின்றனர். அதேநேரத்தில் உதவி எண்கள் வாயிலாகப் பயண முகமைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.