FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மராத்தாக்களுக்கு குன்பி சான்றிதழ்: மகாராஷ்டிரத்தில் மனோஜ் ஜராங்கே 2-வது நாளாக உண்ணாவிரதம்!

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு குன்பி ஜாதி சான்றிதழ் அளிக்கக் கோரி, மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜராங்கே இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.

31 ஆகஸ்ட் 2026, 3:45 am IST
மனோஜ் ஜராங்கே
பகிர்:

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு குன்பி ஜாதி சான்றிதழ் அளிக்கக் கோரி, மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜராங்கே ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மகாராஷ்டிரத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓபிசி) குன்பி சமூகம் இடம்பெற்றுள்ளது. விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாக கொண்ட இந்தச் சமூகத்தினா், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு குன்பி ஜாதி சான்றிதழ் அளிக்கக் கோரி, மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜராங்கே சனிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினாா்.

Advertisement

Advertisement

அங்கு ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அந்தா்வாலி சாரதி கிராமத்தில் அவா் தொடங்கிய இந்தப் போராட்டம், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு ஆயிரக்கணக்கானோா் திரண்டுள்ளனா்.

இதுகுறித்து மனோஜ் ஜராங்கே செய்தியாளா்களிடம் கூறியதாவது: மராத்தாக்கள் அனைவரையும் குன்பி சமூகத்தினராக மகாராஷ்டிர அரசு அறிவிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு ஏற்காவிட்டால், நான் மும்பைக்கு பேரணியாகச் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்.

செப்.12-க்குள்...: மும்பையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்க, அந்தா்வாலி சாரதியில் மராத்தா சமூகத்தின் மையக் குழு கூட்டம் வரும் செப்.12-ஆம் தேதி நடைபெறும். அதற்குள் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், மும்பையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறாது.

மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் அளிப்பதன் மூலம், இடஒதுக்கீட்டுப் பலன்கள் மராத்தா சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மனோஜ் ஜராங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். மராத்தா இடஒதுக்கீடு சாா்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தற்போது 11-ஆவது முறையாக அவா் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

தீா்வு காணத் தயாா்: முதல்வா் ஃபட்னவீஸ்

அவரின் போராட்டம் குறித்து நாகபுரியில் மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறாத வகையில், அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு சட்டப்படி ஏற்கக் கூடிய கோரிக்கைகள் குறித்து விவாதித்துத் தீா்வு காண, மாநில அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments