மணிப்பூர் பாஜக சட்டப்பேரவை தலைவராக ஒய். கேம்சந்த் சிங் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரே முதல்வராகவும் தேர்வாகிறார். அம்மாநிலத்தின் துணை முதல்வராக குகி இனத்தைச் சேர்ந்த பெண் தலைவர் நேம்ச்சா கிப்ஜென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்ட கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை தலைவராக கேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று(பிப். 3) இரவு நடைபெற உள்ளது. அதில், கேம்சந்த் சிங்கின் பெயர் முதல்வர் பதவிக்கும், நேம்ச்சா கிப்ஜென் துணை முதல்வராகவும் முன்மொழியப்படுவார்கள் என்று இவ்விவகாரம் குறித்து நன்கறிந்த பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023 தொடங்கி தலைவிரித்தாடிய மெய்தி - குகி இன மக்களுக்கிடையேயான கலவரத்தில் 260க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அசாதாரண சூழலைத் தொடர்ந்து பைரன் சிங் தலைமையிலான மணிப்பூர் அரசு கலைக்கப்பட்டு, மணிப்பூரில் கடந்த ஆண்டு பிப். 13 தொடங்கி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பிப். 12-ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து, அமையவுள்ள புதிய அரசுக்கு கேம்சந்த் தலைமை வகிப்பார். அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2027 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.