மலேசியா: பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஒலித்த எம்ஜிஆரின் நாளை நமதே பாடல்!
மலேசியா நிகழ்ச்சியில் ஒலித்த எம்ஜிஆரின் ’நாளை நமதே’ பாடல்.
மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்ஜிஆரின் ’நாளை நமதே’ பாடல் பாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் நேரில் வரவேற்றனர்.
Advertisement
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பிரதமா் மோடி இன்று(பிப். 8) இருதரப்பு உயர்நிலை பேச்சுவாா்த்தையை நடத்தினார். மேலும், முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதனிடையே, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து அளித்துள்ளார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் ’நாளை நமதே’ பாடல் பாடப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!” என்று அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
மலேசியா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “அழகும் தொன்மையும் வாய்ந்த தமிழ் மொழியும், மகத்தான தமிழ்ப் பண்பாடும் இந்தியாவையும் மலேசியாவையும் நெருக்கமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த ஒலி-ஒளி ஒப்பந்தம் தமிழ்ப் பண்பாட்டை மேலும் பிரபலப்படுத்தி, நமது கலாசாரப் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும்” என்று குறிப்பிட்டார்.