பிப். 4 அன்று மக்களவையில் நடந்தது என்ன? விடியோ வெளியிட்ட கிரண் ரிஜுஜு!
மக்களவையில் பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்த விடியோவை அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ளது பற்றி...
பிப். 4 அன்று மக்களவையில் எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்த விடியோ ஒன்றை அமைச்சர் கிரண் ரிஜுஜு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சீன ஆக்கிரமிப்பு குறித்த முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிப். 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பிப். 4 ஆம் தேதி அன்று மக்களவையில் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.
Advertisement
Advertisement
பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை எழுப்பியது.
பிரதமர் மோடி அன்று மக்களவைக்கு வராதது குறித்து இரு தரப்பு எம்.பி.க்களும் பேசி வரும் நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, பிப். 4 அன்று எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்த விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பிரதமர் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பாஜக எம்.பி.க்களுடன் வாக்குவாதம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விடியோவை வெளியிட்டு "காங்கிரஸ் கட்சி, தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது.
அனைத்து பாஜக எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தி, பெண் எம்.பி.க்களை அனுமதித்திருக்காவிட்டால் அன்று மிகவும் இழிவான காட்சிக்கு வழிவகுத்திருக்கும்.
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.
Minister Kiren Rijiju releases video of women MPs protesting in Lok Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.