உ.பி. பட்ஜெட்: சுகாதாரத் துறைக்கு ரூ. 37,956 கோடி ஒதுக்கீடு!
உத்தரப் பிரதேசத்தில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல் பற்றி..
உத்தரப் பிரதேசத்தில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கலில் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆயுஷ் துறைகளுக்குக் கணிசமான ஒதுக்கீடு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப். 11) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா மாநில சட்டப் பேரவையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ரூ. 9.12 லட்சம் கோடியில் தாக்கல் செய்தார். இது கடந்தாண்டை விட சுமார் 12.2 சதவிகிதம் அதிகமாகும்.
மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ. 37,956 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டை விட 15 சதவீதம் அதிகம் என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பிரசவத்திற்காக அரசு சுகாதார மையங்களுகளை அணுகும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உத்தரவாதமான இலவச பிரசவ சேவைகளை உறுதி செய்வதற்காக ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
தேசிய குழந்தைகள் சுகாதாரத் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், 2024 டிசம்பர் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் போலியோ தடுப்பு திட்டத்தின் மூலம் சுமார் 3,28,44,929 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி மாநிலத்தின் 42 மாவட்டங்களில் தடையின்றி மேற்கொள்ளப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ், 49.22 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் 75 மாவட்டங்களிலும் மாவட்ட மனநலத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்திற்கு சுமார் ரூ. 8,641 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வித் துறையில் பட்ஜெடில் ரூ.14,997 கோடி முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, உத்தரப் பிரதேசத்தில் 81 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் 45 மாநில அரசால் நடத்தப்படும் மற்றும் 36 தனியார்த் துறையில் உள்ளன. தற்போது 60 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் 16 சேவை பெறாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2017ல் 4,540 ஆக இருந்தது, தற்போது 12,800 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், 2017 இல் 1,221 ஆக இருந்த முதுகலை இடங்கள் 4,995 ஆக உயர்ந்துள்ளன. 14 புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு ரூ.1,023 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Uttar Pradesh government has earmarked substantial allocations for health, medical education and AYUSH sectors in the 2026-27 Budget, underscoring its focus on strengthening healthcare infrastructure and services across the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.