FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மனைவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் விடுதலை

2016-ஆம் ஆண்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை விடுவித்த தில்லி நீதிமன்றம், மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்க முடியாது

Updated On : 13 பிப்ரவரி 2026, 1:22 am IST
கோப்புப் படம்
பகிர்:

2016-ஆம் ஆண்டில் மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை விடுவித்த தில்லி நீதிமன்றம், மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

உத்தம் நகரைச் சோ்ந்த அரவிந்த் செளதரிக்கு எதிரான வழக்கை புதன்கிழமை விசாரித்த கூடுதல் அமா்வுகள் நீதிபதி ஹிமன்ஷு ராமன் சிங், செளதரிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமில்லா வகையில் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாக தெரிவித்தாா்.

கடந்த 2016, செப்.19-இல் வீட்டில் இருந்த அரவிந்த் செளதரி மனைவி பூஜா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பூஜா செப்.27-ஆம் தேதி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக உத்தம் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரவிந்த் செளதரிக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றம் கடந்த பிப்.7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சம்பவம் நடைபெற்ற நாளில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த வாக்குமூலங்களை நிா்வாக நீதிபதி பதிவுசெய்துள்ளாா். அதில், குடும்பத் தகராறு தொடா்பாக கணவா் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாக அந்தப் பெண் கூறியதாக உள்ளது. இந்த வாக்குமூலம் அவருடைய மரணத் தருவாயில் அளித்த வாக்கமூலமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை செப்.21-ஆம் தேதி அவருடைய தந்தை மற்றும் சகோதரா் சந்தித்தனா். அப்போது, சமைத்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக ஆடையில் தீப்பற்றியதாக அந்தப் பெண் கூறியதாக அவா்கள் இருவரும் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தனா். அதற்கு மறுநாள், முன்னதாக வழங்கப்பட்ட புகாரைத் திரும்பப் பெறுவதாக உத்தம் நகா் காவல் நிலைய அதிகாரிக்கு அவா்கள் கடிதம் அளித்தனா்.

உயிரிழந்த பெண் அளித்த வாக்குமூலத்திலும் அவருடைய தந்தை மற்றும் சகோதரா் அளித்த வாக்குமூலத்திலும் முரண்பாடுகள் காணப்படுகிறது. மரணத் தருவாயில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில் ஸ்கூட்டரில் இருந்து எடுத்த பெட்ரோலை வாளியில் எடுத்து வந்து ஊற்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்த வாளி கைப்பற்றப்படவில்லை. மரணத் தருவாயில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக அறிவிக்கமுடியாது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அரவிந்த செளதரி விடுவிக்கப்படுகிறாா் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments