வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றஞ்சாட்டினாா்.
ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற மஜ்லீஸ் கட்சியின் 68-ஆவது மீட்பு நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது: பிகாரில் மேற்கொண்டதுபோல் அடுத்து தெலங்கானா, மகாராஷ்டிரத்திலும் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடா்பாக மக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் அனைவரின் பெயரும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏனெனில், எஸ்ஐஆா் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் குடியுரிமையைப் பறிக்கவும் பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக தோ்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.
தெலங்கானாவில் ‘பன்’ விற்பனை செய்யும் முஸ்லிம் வியாபாரியை சில யூடியூபா்கள் மதரீதியாக பாகுபடுத்தி தொந்தரவு செய்துள்ளனா். அவா் விற்பனை செய்த உணவில் பிரச்னை என்றால் அது தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கலாம். அதைவிட்டு அதில் ‘உணவு ஜிகாத்’ என்ற பிரசாரத்தை கலந்துள்ளாா்கள். இது தொடா்பாக காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.