மே.வங்கத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த 6 வங்கதேசத்தினர் கைது!
கொல்கத்தாவில் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவின் கோலின் தெருவில், விசா காலாவதியாகியும் இந்தியாவில் இருந்து வெளியேறாமல் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச பாடகர் அஸாம் மொல்லாஹ் மற்றும் அபிர் ஹொசைன், முஹமது மாமுன் ரஷீத், முஹம்மது அலிமுன் காசி, ஃபைசல் அமின், ஸைதுல் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 17) தெரிவித்துள்ளனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக நடைபெற்ற நாடுத்தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து, ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனால், வங்கதேசத்தில் தாக்குதலுக்குப் பயந்து அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் மருத்துவ விசா மூலம் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும், பிப்.27 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.