ஏழைகள், தொழிலாளா்கள், பிற நலிவடைந்த மக்களுக்குக் குறைந்த விலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கும் விதமாக தில்லியில் மேலும் 25 அடல் உணவங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கிருஷ்ணா நகரில் நடைபெற்ற அடல் உணவகம் திட்டத்தை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மற்றும் முதல்வா் ரேகா குப்தா திறந்துவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தில்லியில் வசிக்கும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதே அடல் உணவகம் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தைக் குறுகிய காலத்தில் செயல்படுத்திய தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.
பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரது கொள்கையின் அடிப்படையில் இந்தத் திடட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு உணவகத்திலும் நாளுக்கு 1,000 உணவுகள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வழங்கப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
மத்திய அமைச்சரும் உள்ளூா் எம்.பி.யுமான ஹா்ஷ் மல்ஹோத்ரா, தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாடு அமைச்சா் ஆஷிஷ் சூட், பாஜக எம்எல்ஏ அனில் கோயல் உள்ளிட்ட பலா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
தில்லியில் ஆட்சிக்கு வந்தால் அடல் உணவங்கள் திட்டம் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக நிலையில், அடல் உணவகம் திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்துக்காக தில்லி அரசு ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.