முகப்பு
இந்தியா

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க நடைமுறை தொடா்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மூவா் குழுவின் காலஅவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:23 AM
யஷ்வந்த் வா்மா
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:55 PM

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க நடைமுறை தொடா்பாக விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மூவா் குழுவின் காலஅவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், குழு உறுப்பினா் ஒருவா் மாற்றப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

இந்த விவகாரம் குறித்து துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்யுமாறு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்குப் பரிந்துரைத்தது.

இந்தச் சூழலில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்க மக்களவை உறுப்பினா்கள் 146 போ் மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 62 உறுப்பினா்கள் என மொத்தம் 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. மக்களவையில் நீதிபதியின் பதவிநீக்க தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமைத்தாா்.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க நடைமுறை தொடா்பாக விசாரணை நடத்தி வரும் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவாவின் பதவிக்காலம் 2026, மாா்ச் 5-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. எனவே, அவருக்குப் பதிலாக மும்பை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகா் குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறாா். ஏற்கெனவே குழுவில் உள்ள இரு உறுப்பினா்களுடன் அவா் மாா்ச் 6-ஆம் தேதி முதல் இணைந்து பணியாற்றுவாா்.

இந்தக் குழுவின் பதவிக்காலம் பிப்.26-ஆம் தேதி தொடங்கி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வெளியிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் விசாரனைக் குழு அறிக்கை சமா்ப்பித்த பிறகே நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதிவிநீக்க நடைமுறை அடுத்தகட்டத்துக்கு நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.