யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்!
யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது பற்றி...
யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை (ஜூலை 9) வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் 30 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழு - தேசிய தகுதித் தேர்வின் (யுஜிசி நெட்) சமூகவியல் பாடத்தில் தேர்வு எழுதிய பல தேர்வர்கள், வினாத்தாள் கசிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
யுஜிசி நெட் தேர்வு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, வினாத்தாள் வடிவமைப்பு குறித்த 100 பக்க ரகசிய பிடிஎஃப் கோப்பு சமூக வலைத்தளங்களில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது:
இந்த ஆண்டு நடைபெற்ற சமூகவியல் தேர்வு கணினி வழித் தேர்வாக இருந்தபோதிலும், அதன் வினாத்தாள்கள் கசிந்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, யுஜிசி நெட் ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், கடந்த கால வினாத்தாள்களில் இருந்து எந்த மாற்றமும் இன்றி மொத்தமாக எடுக்கப்பட்டிருந்ததை நாம் பார்த்திருந்தோம்.
எந்தத் தேர்வாக இருந்தாலும் மோடி அரசின் கல்வி அமைச்சகத்தின் கவனக் குறைவாலும் தேசிய தேர்வு முகமையின் திறமையற்ற நிலையாலும் வினாத்தாள் கசிவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் உள்ளது.
ஆகையால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதோடு தேசிய தேர்வு முகமையையும் கலைக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Congress leader Jairam Ramesh demanded on Thursday (July 9) that Union Education Minister Dharmendra Pradhan resign over the UGC-NET question paper leak issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.