கேரளம்: துப்பாக்கி முனையில் பேருந்து டிக்கெட் பணத்தைக் கொள்ளையடித்தவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
கேரளத்தில் கொள்ளைச் சம்பவத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதியவர் ஒருவர் தனது 71ஆவது வயதில் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி....
கேரளத்தில் துப்பாக்கி முனையில் அரசுப் பேருந்து டிக்கெட் வசூல் பணத்தைக் கொள்ளையடித்தவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
36 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடகத்தின் மைசூரில் தனது 71ஆவது வயதில் அவர் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸார் தெரிவித்தனர். மலப்புரம் மாவட்டத்தின் அரிகோடைச் சேர்ந்த வி.கே. ஜோஸ் என்று அடையாளம் காணப்பட்ட இவர், மைசூரின் நரசிம்மராஜா பகுதியில் சிவகுமார் என்ற போலி அடையாளத்துடன் வசித்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 1990-ஆம் ஆண்டில் திருவம்பாடி மற்றும் கூம்பாரா இடையே இயங்கிய கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநரிடம் துப்பாக்கியைக் காட்டி, டிக்கெட் வசூல் பணத்தை ஜோஸ் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. திருவம்பாடி போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத்தொடர்ந்து நீதிமன்றம் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.
Advertisement
Advertisement
சம்பவத்திற்குப் பிறகு ஜோஸ் மைசூருக்குத் தப்பிச் சென்று, புதிய அடையாளத்துடன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். ஜூலை 8ஆம் தேதி ஜோஸுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காவல் நிலையம் வரை வந்தது. அதில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது படுக்கைக்கு அடியில் இருந்த துப்பாக்கி மற்றும் சில ஆவணங்களை மைசூர் போலீஸார் கைப்பற்றினர்.
அந்த ஆயுதம் மற்றும் ஆவணங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது ஜோஸால் திருப்திகரமான விளக்கங்களை அளிக்க முடியவில்லை. பின்னர் மைசூர் போலீஸார் இந்த விவரங்களைக் கேரள போலீஸுடன் பகிர்ந்துகொண்டனர். அவரது குற்றப் பின்னணியைச் சரிபார்த்த கேரள போலீஸார், 1990-ஆம் ஆண்டு நடந்த கொள்ளை வழக்கில் ஜோஸ் தேடப்படும் நபர் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, திருவம்பாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் மைசூரில் உள்ள நரசிம்மராஜா காவல் நிலையத்திற்குச் சென்று ஜோஸைக் காவலில் எடுத்தனர். பின்னர் அவர் திருவம்பாடிக்குக் கொண்டு வரப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது திருவம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A 71-year-old man, allegedly involved in robbing a KSRTC bus ticket collection at gunpoint at Thiruvambady here, was arrested from Mysuru in Karnataka after remaining absconding for 36 years, police said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.