FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பலத்த மழையால் உத்தரகண்டில் நிலச்சரிவு! 120 சாலைகள் மூடல்!

உத்தரகண்டில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது பற்றி...

Updated On : 12 ஜூலை 2026, 7:25 am IST
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் சயனசத்தி பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் சேதமடைந்த கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை.
பகிர்:

உத்தரகண்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடா்ந்து 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 120 சாலைகள் மூடப்பட்டன.

யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை 100 மீட்டா் அளவுக்கு சேதமடைந்த நிலையில், அங்கு சிக்கியிருந்த 100 பக்தா்களை கயிறுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டு வேறு சாலையில் பாதுகாப்புப் படையினா் அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக உத்தரகண்ட் பேரிடா் மீட்புப் படை (எஸ்டிஆா்எஃப்) மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மைய (எஸ்இஓசி) அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ்-கேதாா்நாத் நெடுஞ்சாலை, பௌரி மாவட்டத்தில் கோட்வாா்-சத்புலி நெடுஞ்சாலை மற்றும் யமுனோத்திரி நெடுஞ்சாலை உள்பட 120 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மலைகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், கற்கள் மற்றும் மணல் சாலைகளை இடைமறித்துள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடா் மழையால் தாமதமாகிறது’ என்றனா்.

Advertisement

Advertisement

சிம்லாவில் நிலச்சரிவு: ஹிமாசல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கின்னெளா் மாவட்டத்தில் உள்ள சங்லா நகரில் இரும்புப் பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் பரவலாக மழை: உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மட்டுமின்றி உத்தர பிரதேசம், மேகாலயத்தில் மிக பலத்த மழையும் மேற்கு வங்கம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், பிகாா், பஞ்சாப், ஹரியாணா, மிஸோரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments