மனித உயிர் மதிப்புமிக்கது! சோனம் வாங்சுக் வழக்கில் தில்லி நீதிமன்றம்!
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் பற்றி..
தில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும், அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தரமேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை பாதுகாக்க வலியுறுத்தி தில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் 18-வது நாளை எட்டியுள்ளது. ஆனால், அதைப் பற்றி அரசுக்குக் குறைந்தபட்ச அக்கறைகூட இல்லை.
Advertisement
Advertisement
வாங்சுக் உயிரிழந்தால், அது நாட்டிற்குப் பெரும் அவமானமாக இருக்கும், அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதே அரசு செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயலாகும்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒரு குடிமகனின் அடிப்படை, ஜனநாயக உரிமை என்றும், தற்போதைய சூழ்நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது தற்கொலைக்குத் தூண்டும் குற்றத்தைச் செய்வதற்குச் சமம் என்றும் அந்த மனு கூறியுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
அப்போது, ஒவ்வொரு குடிமகனின் உயிர் விலைமதிப்பற்றது. அதைக் காக்க அரசு அதிகாரிகள் அனைத்து மருத்துவ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மத்திய அரசு மற்றும் தில்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒவ்வொரு தனிநபரின் உயிரும் விலைமதிப்பற்றது. வாங்சுக்கிற்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.
சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைத் தினசரி அடிப்படையில் கண்காணிக்கவும், தேவைப்படும் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The Delhi High Court on Thursday directed authorities to monitor daily the health of activist Sonam Wangchuk, who is on an indefinite fast at Jantar Mantar here over alleged irregularities in the NEET exam, and extend medical aid if his condition deteriorates.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.