மோடி அரசின் சர்வாதிகாரம்! - சோனம் வாங்சுக்கின் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...
மத்திய அரசுக்கு எதிராக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வந்த போராட்டத்தை தில்லி காவல் துறையினர் கலைத்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, கடந்த ஜூன் 28 அன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மத்திய அரசு நீட் முறைக்கேடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் 21 ஆவது நாளை எட்டிய நிலையில், இன்று (ஜூலை 18) காலை அத்துமீறி உள்ளே நுழைந்த தில்லி காவல் துறையினர் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், அமைதியான முறையில் நடைபெற்று வந்த சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டம் தில்லி காவல் துறையினரால் கலைக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம் ஏ பேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“சோனம் வாங்சுக் மற்றும் அபிஜீத் தீப்கே தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து அழித்து வரும் அமைப்பை சீரமைப்பதையோ, வினாத்தாள்கள் கசிவு போன்ற சம்பவங்கள் யாரின் தலைமையின் கீழ் நடந்ததோ அந்த கல்வி அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யாமல் அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது மோடி அரசின் சர்வாதிகாரத்தை வெளிக்காட்டியுள்ளது. மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவது பொறுப்புக்கூறல்களுக்கு மாற்றாக அமையாது” எனக் கூறியுள்ளார்.
CPIM has condemned the Delhi Police for dispersing the protest staged by Sonam Wangchuk.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.