சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனைவி கோரிக்கை!
அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சோனம் வாங்சுக்கின் மனைவி கோரிக்கை வைத்துள்ளது குறித்து...
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக், தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் போராட்டத்தைத் தொடங்கினர்.
Advertisement
Advertisement
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து அரசு மருத்துவமனையில் போதிய தகவல்களை தர மறுப்பதால், அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை என அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தெரிவித்துள்ளார்.
சோனம் உடல்நிலை குறித்து ஒரு குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே அளிப்பதால், அவரின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்குள் தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சிகிச்சையின் நிலை குறித்தும் உடல்நிலை குறித்தும் தெரிந்துகொள்ள தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கீதாஞ்சலி பதிவிட்டுள்ளதாவது:
''அரசு மருத்துவமனை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சோனம் வாங்சுக் உடலில் பொட்டாசியம் அளவு 2.9 என்ற அளவுக்கு குறைந்துவிட்டதாகவும், இதனால் ஆபத்தான நிலையில் அவரின் உடல்நிலை இருப்பதாகவும் சஃப்தார்ஜங்க் மருத்துவமனை கூறியது. பல தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு இரவு 10.30 மணியளவில் அவரின் ரத்த மாதிரிகளை எங்களுக்கு அவர்கள் அளித்தனர். தனியார் கூடத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அவரின் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு 3.5 ஆக உள்ளது தெரியவந்துள்ளது. இது சராசரியான அளவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவரை அரசு மருத்துவமனையிலிருந்து நாங்கள் விரும்பும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற எங்களை அனுமதிக்க வேண்டும். எங்கள் தளத்தில் சுமார் 30 காவலர்களும், மருத்துவமனை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவலர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், எங்கள் நடமாட்டம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மருத்துவச் சிகிச்சை அல்ல; இது ஒருவகையில் சட்டவிரோதக் காவல்.
சோனம் வாங்சுக்கிற்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு அரசு மருத்துவமனையும் அரசாங்கமுமே காரணம்.
எனவே, சோனமின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்கு முன்பாக அவரை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதி கோரி, நான் உயர்நீதிமன்றத்தை அணுகி இன்று அவசர விசாரணைக்கு விண்ணப்பித்துள்ளேன்.
தங்கள் அன்புக்குரியவர் எங்கு மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக எந்தவொரு குடும்பமும் அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது'' என அவர் பதிவிட்டுள்ளார்.
Sonam Wangchuk's wife seeks urgent court hearing to shift him from Safdarjung Hospital
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.