உணவு போதும்! ஜந்தர் மந்தரிலிருந்து சிஜேபி வைத்த கோரிக்கை!
போதுமான உணவு இருப்பதாகவும், யாரும் புதிதாக உணவு அனுப்ப வேண்டாம் என ஜந்தர் மந்தரிலிருந்து சிஜேபி கோரிக்கை வைத்துள்ளது.
ஜந்தர் மந்தரில் போராடி வரும் எண்ணற்ற இளைஞர்களுக்காக நாடு முழுவதுமிருந்து உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் உணவு அனுப்பப்பட்டு வருகிறது. இது எந்த அளவில் இருக்கிறது என்றால், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியே, உணவு அனுப்புவதை நிறுத்துங்கள் என்று சொல்லும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பேரணி செல்ல முயன்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், மத்தியப் படை வீரர்கள், காவல்துறையினர் இவர்கள் மீது தடியடி நடத்தியதில் ஏராளமான இளைஞர்கள் காயமடைந்தனர். எனினும் போராட்டம் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடந்து வரும் ஜந்தர் மந்தரில் போதுமான அளவை விட அதிகமாகவே உணவு இருப்பதாகவும், யாரும் புதிதாக உணவு அனுப்ப வேண்டாம் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த இரண்டு நாள்களாக ஜந்தர் மந்தரில் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக, நாடு முழுவதிலுமிருந்தும் ஏராளமானோர் உணவு விநியோகிக்கும் செயலிகள் வாயிலாக உணவுகளை ஆர்டர்போட்டு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் கிடைத்த தகவலின்படி, உலகின் பல நாடுகளிலிருந்தும் உணவு ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட ஏராளமான இளைஞர்கள் திரண்டு வர வேண்டும் என்று சிஜேபி அழைப்பு விடுத்தது. ஆனால், தில்லியில் இல்லாதவர்கள் ஒருபடி மேலே சென்று, போராட்டக்காரர்களுக்கு உணவுகளை அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஒரு வேளைக்கு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட உணவு ஆர்டர்கள் ஜந்தர் மந்தருக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போதுமான அளவில் உணவு இருப்பதாகவும், மேற்கொண்டு யாரும் உணவு ஆர்டர் செய்து அனுப்ப வேண்டாம் என்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து உணவு வந்துகொண்டேயிருப்பதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் இளைர்கள் உணவுகளை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்களாம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லாதவர்கள், வெறும் மனிதாபிமானத்தோடு, நாடு முழுவதுமிருந்தும் உணவுகளை அனுப்புவதைப் பார்க்கும்போது, பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். குடிநீர் பாட்டீல்களும் வந்து குவிகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய முயன்று வந்தோம். இப்போது வரும் உணவை அனைவருக்கும் பிரித்துக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம் என்கிறார்கள் தன்னார்வலர்கள்.
போராட்டக்களமே, ஒரு சமுதாய ஒருங்கிணைப்பின் அடையாளமாக மாறியிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.