நீட் விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பி.வி. குல்கர்னி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகள் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டன.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர், பேராசிரியர் மற்றும் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றது.
Advertisement
Advertisement
இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில், நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான பி.வி. குல்கர்னிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டடம் இருந்தது.
இந்த கட்டடத்தின் சில பகுதிகள், மாநகராட்சி அனுமதியின்றி விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கக் கோரி பி.வி. குல்கர்னிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆகையால், நகராட்சி சார்பில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே, அவர்கள் தாமாக முன்வந்து அந்தப் பகுதிகளை இடித்து அகற்றினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேதியியல் பாடப்பிரிவில் துறைசார் நிபுணரான பி.வி. குல்கர்னி, பல ஆண்டுகளாக நீட் வினாத்தாளைத் தயாரித்த குழுவில் அங்கம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.