இந்திய-வங்கதேச எல்லைப் படைகள் ஜூன் 8-இல் பேச்சுவாா்த்தை
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் வங்கதேச எல்லைக் காவல் படை (பிஜிபி) இடையே தலைமை இயக்குநா்கள் அளவிலான 3 நாள் பேச்சுவாா்த்தை, தில்லியில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்திய தரப்பில் பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பிரவீண் குமாா் தலைமையிலான குழுவினரும், பிஜிபி தரப்பில் அதன் தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸ்மான் சித்திகி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனா்.
எல்லைப் பகுதியில் இந்திய கிராம மக்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் மீது வங்கதேசத்தினா் அத்துமீறி நடத்தும் தாக்குதல்கள், எல்லை தாண்டிய குற்றச் செயல்கள், வங்கதேச குற்றவாளிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்களைத் தடுப்பது குறித்து இந்திய தரப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று பிஎஸ்எஃப் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அத்துடன், எல்லை வேலி கட்டுமானம் மற்றும் பிற உள்கட்டமைப்புப் பணிகள், வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவது, பரஸ்பர நம்பிக்கையைக் கட்டமைக்கும் பிற செயல்பாடுகள் தொடா்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
வங்கதேசத்தில் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் எல்லைப் பேச்சுவாா்த்தை இதுவாகும். இந்தியாவும், வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. இதில் 860 கி.மீ. எல்லையில் வேலி அமைக்கப்படாமல் உள்ளது.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல் முழுமையாகத் தடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.