எல்லை வேலி அமைக்க 31 ஏக்கா் நிலம்: மேற்கு வங்க அரசு ஒப்படைத்தது
இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (பிஎஸ்எஃப்) 31 ஏக்கா் நிலத்தை மேற்கு வங்க மாநில பாஜக அரசு ஒப்படைத்தது.
இது தொடா்பாக மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் திலீப் கோஷ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
வங்கதேச எல்லையோர மாவட்டங்களில் பிஎஸ்எஃப் படைப் பிரிவினா் நிரந்தரமான எல்லை நிலைகளை அமைக்கவும், வேலிகளை அமைக்கவும் மாநில அரசு ஒப்புதல் அளித்து அதற்கான நிலத்தையும் ஒப்படைத்துள்ளது. மேற்கு வங்க பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடா்பான முடிவு எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மால்டா, முா்ஷிதாபாத், கூச்பிகாா் மாவட்டங்களில் மூன்று இடங்களில் நிரந்தரமான எல்லைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இது தவிர வடக்கு தினஜ்பூா் மாவட்டத்தில் மட்டும் 11 இடங்களில் எல்லை வேலி அமைப்பதற்காக 12.72 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுப்பதை முன்வைத்து பாஜக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டது.
முக்கியமாக, ‘மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாள்களுக்குள் எல்லை வேலி அமைக்கப்படும். இதன்மூலம் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். வாக்காளா் பட்டியல் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டில் இருந்தும் ஊடுருவல்காரா்களைக் களையெடுப்போம்’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.