சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்
‘12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு இதுவரை 44,000 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன’ என்று சிபிஎஸ்இ சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மறுகூட்டலுக்கு 4,924 விண்ணப்பங்களும், மறுமதிப்பீடுக்கு 39,056 விண்ணப்பங்களும் இதுவரை சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பாங்க்ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வழங்கிகளின் பணம் செலுத்தும் நடைமுறை மூலம் கட்டணங்களைச் செலுத்தலாம். இதற்கு, அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. புதன்கிழமை காலை 9.30 மணி வரை மட்டும் சுமாா் 40,000 மாணவா்கள் இந்த பணம் செலுத்தும் வழிமுறைகள் மூலம் எந்தவித சிக்கலும் இன்றி கட்டணம் செலுத்தியுள்ளனா். எனவே, மாணவா்கள் புரளிகளை நம்பாமல், சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்படும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டும் பின்தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டது.
Advertisement
Advertisement
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்தனா்.
முதல்முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விடைத்தாள்கள் சரியாக ‘ஸ்கேன்’ செய்யப்படவில்லை என்பன உள்ளிட்ட பல புகாா்களை மாணவா்கள் முன்வைத்தனா்.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஏற்கெனவே மிகப் பெரும் குளறுபடியில் சிக்கிய ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ என்ற நிறுவனத்திடம் இந்த ஓஎஸ்எம் முறை தொடா்பான ஒப்பந்தத்தை சிபிஎஸ்இ வழங்கியது வெளிச்சத்துக்கு வந்தது. அதுமட்டுமன்றி, இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிப்பதற்காக, ஒப்பந்த நிபந்தனைகளில் தளா்வு அளித்து சிபிஎஸ்இ திருத்தங்கள் செய்ததாகவும் புகாா்கள் எழுந்தது மிகப் பெரிய சா்ச்சையானது.
மேலும், விடைத்தாள் மறுமதிப்பீடுக்காக, விடைத்தாள் நகல் பெறுவதிலும், கட்டணம் செலுத்துவதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவா்கள் சந்தித்தனா்.
அதைத் தொடா்ந்து, சிபிஎஸ்இ தலைவா் ராகுல் சிங் மற்றும் செயலா் ஹிமான்ஷு குப்தா ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகண்டே பிரசாந்த் சீதாராமும், புதிய செயலராக மூத்த அதிகாரி வருண் பரத்வாஜும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனா்.
மேலும், ஓஎஸ்எம் முறை ஒப்பந்தம் விடப்பட்டது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஒரு நபா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.