கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் இன்று (ஜூன் 3) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக ஜூன் 6 ஆம் தேதி போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பேசியதற்கு எதிர்வினையாற்றும் வகையில் நாட்டில் புதிதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜீத் தீப்கே தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி ) சமூக ஊடகப் பக்கத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்த கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் பாஜகவை பின்தொடர்பவர்களைவிட (94 லட்சம்) இரண்டு மடங்குக்கு மேல் சிஜேபி பக்கத்தை 2.2 கோடி பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
டிஜிட்டல் அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய தோ்தல் ஆணையத்திடம் ஹரியாணாவை சோ்ந்த வழக்குரைஞா் சுதீா் ஜாக்கா் விண்ணப்பம் அளித்துள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 6 ஆம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்கட்சிக்கு செளரவ் தாஸ், விஜேதா தாஹியா, அஷுடோஸ் ராணா ஆகிய 3 பேர் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யார் இவர்கள்?
செளரவ் தாஸ். புலனாய்வு இதழியலில் நிபுணத்துவம் கொண்டவர். பல ஆண்டுகளாக முக்கியமான சட்டம், நீதித்துறை மற்றும் சமுக பிரச்னைகள் குறித்து புலனாய்வு செய்து, அறிக்கை அளித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக 2025 நவம்பரில் இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்.
விஜேதா தாஹியா. இவர் ஒரு எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளராகவும் இயக்குநராகவும் உள்ளார். பிரபல யூடியூபரான துருவ் ராதி உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து விடியோக்களை பதிவிட்டுள்ளார். பவர் ஆஃப் யூனிவர்ஸ், டூ ஹெல் வித் தட் ஜாப் என இரு புத்தகங்களை எழுதியுள்ளார். இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.
அஷுடோஸ் ராணா. ஐஐடி கரக்பூரின் மாணவராக இருந்தவர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்தில் பயின்றவர். லண்டனில் ஒருசில நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். 2025 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிய இவர், ஜெய்ப்பூரில் உள்ளூட் மக்களின் பிரச்னைகளுக்காக மக்களைத் திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு, கல்வி பிரச்னை, மாணவர் தற்கொலை உள்ளிட்ட பிரச்னைகளில் மக்களைத் திரட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.