முகப்பு
இந்தியா

பிகாா் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

Updated On : 5 ஜூன் 2026, 4:59 am IST
பிகாா் மாநிலம் முசாபா்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் எரிந்து கருகிய அவசர சிகிச்சைப் பிரிவு.
பகிர்:

பிகாா் மாநிலத்தில் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

முசாபா்பூா் மாவட்டம் பிரம்மபுரா பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை 3 மணிக்கு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பின்னா், தீ வேகமாக அவசர சிகிச்சை பிரிவுக்கும் பரவியது. இதில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.

தீ விபத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய 5 போ் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியா் சுப்ரத்குமாா் சென் அமைத்துள்ளாா்.

தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி இரங்கல் தெரிவித்துள்ளாா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தலா ரூ.4 லட்சம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் விஜய்குமாா் செளதரி கூறுகையில், ‘தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனா். விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்’ என்றாா்.

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் ஆகியோரும் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.