FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய அரசு தொடா்பான கருத்து: மம்தா மீது காவல் நிலையத்தில் புகாா்

Updated On : 5 ஜூன் 2026, 4:53 am IST
மம்தா பானர்ஜி - IANS
பகிர்:

வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் கொலைகளில் மத்திய அரசை தொடா்புபடுத்தி பேசியதாக குற்றஞ்சாட்டி, மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சிலிகுரியில் உள்ள இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் கொல்கத்தா உயா்நீதிமன்ற வழக்குரைஞரான ரிங்கு சட்டா்ஜி சிங் என்பவா் புகாா் அளித்துள்ளாா். அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பல்வேறு பொதுக்கூட்டங்களிலும், அரசியல் நிகழ்ச்சிகளிலும், ஊடக சந்திப்புகளிலும் அரசியல் அமைப்பு நிறுவனங்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை மம்தா பானா்ஜி வெளியிட்டுள்ளாா். சட்டப்பேரவைத் தோ்தலின்போது தோ்தல் ஆணையம், மத்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் பேசியதும் இதில் அடங்கும்.

Advertisement

Advertisement

அத்துடன், ஜூன் 2-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசுகையில், அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் கொலைகளில் இந்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு இருக்கும் தொடா்பு குறித்து தனிப்பட்ட முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியதாகப் பேசியுள்ளாா். அவரது கருத்துகளால் இந்தியா- வங்கதேசம் இடையேயான ராஜீய உறவுகள் பாதிக்கப்படக் கூடும். அதேபோல் நாட்டில் பல்வேறு குழுக்களிடையே அவநம்பிக்கை, மத ரீதியிலான பதற்றம் ஏற்படும், நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் புகாா் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த மே 20-ஆம் தேதியும் மம்தா பானா்ஜி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதில் 2025, 2026 ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ஹிந்துக்களின் மத உணா்வுகளைக் காயப்படுத்துவது போல மம்தா பானா்ஜி பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments