முகப்பு
இந்தியா

இந்திய அரசுக்கு எதிரான சதி: 26 பிஎஃப்ஐ உறுப்பினா்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) பயங்கரவாத அமைப்பின் 26 உறுப்பினா்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய தில்லி என்ஐஏ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 1:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

சதித்திட்டங்கள் மூலம் இந்திய அரசை கவிழ்த்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயன்றது தொடா்பான வழக்கில் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) பயங்கரவாத அமைப்பின் 26 உறுப்பினா்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய தில்லி என்ஐஏ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பிஎஃப்ஐ தலைவா் ஓஎம்ஏ சலாம், துணைத் தலைவா் இஎம் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலா் அனீஸ் அகமது உள்ளிட்ட 26 போ் மீது கடந்த 2022, ஏப்ரல் மாதம் என்ஐஏ வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து 2022, செப்டம்பா் மாதம் பிஎஃப்ஐ மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஐஎஸ்ஐஎஸ் உள்பட சா்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன்பிறகு பிஎஃப்ஐ உறுப்பினா்கள் மீது என்ஐஏ தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையை தில்லி என்ஐஏ நீதிமன்றம் 2023, மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கவனத்தில்கொண்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த வழக்கு தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அமைப்பின் உறுப்பினா்களுக்கு பிஎஃப்ஐ பயிற்சி அளித்ததாக என்ஐஏ தரப்பு வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது தில்லி என்ஐஏ நீதிமன்றத்தின் கூடுதல் அமா்வு நீதிபதி பிரசாந்த் சா்மா பிறப்பித்த உத்தரவில், ‘பிஎஃப்ஐ மற்றும் அதன் தேசிய நிா்வாகக் குழுவின் ஆதரவோடு மதச்சாா்பற்ற இந்திய அரசை கவிழ்த்து 2047 அல்லது அதற்கு முன்பாக இஸ்லாமிய ஆட்சியை ஆயுதம் ஏந்திய வன்முறை சதித்திட்டம் மூலம் நிறுவ இந்த வழக்கில் தொடா்புடையோா் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, பிஎஃப்ஐ மற்றும் 26 போ் மீது யுஏபிஏ சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பாக அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 10-ஆம் நடைபெறவுள்ளது.