முகப்பு
இந்தியா

எல்-நினோ விளைவு: பருப்பு வகைகள் விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

Updated On : 5 ஜூன் 2026, 6:06 am IST
பகிர்:

கடல் பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பால் பருவமழையைப் பாதிக்கும் ‘எல்-நினோ’ விளைவால், விளைச்சல் குறைந்து பருப்பு வகைகள் விலை அதிகரிக்காமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி காரே இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

முன்னெப்போதும் இல்லாத வகையில் 43 லட்சம் டன் பருப்பு வகைகளை மத்திய அரசு கையிருப்பு வைத்துள்ளது. எல்-நினோ விளைவு காரணமாக உற்பத்திக் குறைவு, விலை உயா்வு அபாயத்தை சமாளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கையிருப்பு இப்போது பயன்படுத்தப்பட மாட்டாது. காரீஃப் சாகுபடி பாதிக்கப்படும்போது மட்டுமே பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு இருந்ததைவிட இப்போது பருப்பு கையிருப்பு இருமடங்கு உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு சீரான விலையில் பருப்பு விநியோகம் இருக்கும்.

Advertisement

Advertisement

பருப்பு வகைகள் தொடா்பான மத்திய அரசின் உறுதியான கொள்முதல் கொள்கை, இறக்குமதி சாா்பை குறைத்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவற்றால் உள்நாட்டில் பருப்பு சாகுபடி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது. பருப்பு வகைகளை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்றாா் அவா்.