அச்சமூட்டும் எல் நினோ! அக்டோபர் வரை தொடரும் கோடைக்காலம்!
சூப்பர் எல் நினோ தாக்கத்தால் அக்டோபர் வரை கோடைக்காலம் தொடரும் என கணிப்பு.
இந்தாண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால் செப்டம்பர் வரை நீடித்த கோடைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
”இயல்பாக ஜூலை மாதத்தில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் செய்திகளையும், அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்ற செய்திகளையும் தான் கேட்டிருப்போம்.
Advertisement
Advertisement
2026இல் சூழல் வேறுமாறி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூலை 13 ஆம் தேதி வேலூரில் ஜூலையின் அதிகபட்சமாக 42.6°C வெப்பம் பதிவானது. ஜூலை 14ஆம் தேதி மதுரையில் 42.5°C வெப்பம் ஜூலையின் புது உச்சமாகப் பதிவாகியுள்ளது. முன்னதாக ராமநாதபுரம் தொண்டியில் ஜூலை மாதம் அதிகபட்சமாக 40.4°C வெப்பநிலை பதிவானது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜூலை மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 33.6°C வெப்பம் பதிவாகியுள்ளது. இது 1914 ஜூலை 1ஆம் தேதி பதிவான 33.3C வெப்பநிலையை முறியடித்துள்ளது.
ஆந்திர மாநிலம் காவாளியில் 42°C வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த 30 வருடங்களில் ஜூலை மாதத்தில் பதிவாகாத வெப்பநிலையாகும்.
இதுமட்டுமின்றி உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் 6 முதல் 7°C வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
கடலோர மாவட்டங்களில் 39C-க்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் பகல்நேர வெப்பநிலை ஜூலை மாதத்தின் புது உச்சத்தைத் தொடும் அளவுக்கு அதிகரித்து காணப்படக்கூடும்.
ஏற்கனவே மேட்டூர், முல்லைபெரியாறு போன்ற முக்கிய நீர் நிலைகளில் நீர் திறக்கப்படாத சூழலில், இந்த நீடித்த வெப்பத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் பயிர்களில் நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளது, நிலத்தடி நீரில் உப்பு தென்பட துவங்கியுள்ளது. தொடர் வெப்பத்தால் மகசூல் குறையும் அபாயம் நிலவுகிறது.
குளம், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைவதுடன், நீர் மாசடைந்து வரும் சூழலும் உருவாகியுள்ளது.
உருவாகி வரும் எல் நினோ தாக்கத்தால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என அடுத்த 3 மாதங்களும் வெப்பமான மாதங்களாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு சூப்பர் எல் நினோ தாக்கத்தால் செப்டம்பர் வரை நீடித்த கோடைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என இந்தாண்டின் துவக்கம் முதல் கூறி வருகிறோம்.
சூப்பர் எல் நினோ நிகழ்வை அரசு மிகவும் கவனத்துடன் கையாண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Private weather forecaster Hemachandran, known as 'Delta Weatherman', has stated that due to the impact of the 'Super El Niño' this year, we must brace for summer-like conditions extending until September.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.