ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனைகள்! வருமான வரித்துறை புதிய விதி!
ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் தகவல் தெரிவிக்குமாறு வருமான வரித்துறை புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஒரு தனிநபர், தன்னுடைய ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் எடுத்தாலோ அல்லது வரவு வைத்தாலோ அது குறித்து தெரிவிக்க வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒருவர், தன்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் அளவுக்கு பணம் எடுப்பதோ அல்லது வரவு வைப்பதோ சட்டப்படி குற்றமல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
எனவேதான், ஒரு நிதியாண்டுக்குள் ஒருவர் வங்கி அல்லது இதர நிதி நிறுவனங்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணப்பரிவர்த்னை செய்யும்போது அது குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
ஏற்கனவே இதுபோன்ற தொகைகளை வைப்பு அல்லது எடுக்கும்போது பான் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.
ஒரே முறையில் ரூ.10 லட்சத்தை வரவு வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்று அவசியமில்லை, ஒரு நிதியாண்டுக்குள் ஒட்டுமொத்தமாக பல முறைகளில் வரவு அல்லது எடுத்தாலும் கணக்கில் கொள்ளப்படும்.
ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சத்தை வரவு அல்லது எடுக்கிறார் என்றால், அது ரூ.10 லட்சத்தை மீறும்போது, அது குறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
ஆனால், ஒருவர் தன்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததற்காக தண்டிக்கப்படவோ, அபராதம் விதிக்கவோ, வரி செலுத்த வேண்டும் என்றோ நிர்பந்திக்கப்படாது.
வருமான வரித்துறை, இந்த தொகையை கணக்கில் வைத்துக் கொள்ளும். அவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, அவரது வருவாய், இந்தத் தொகையுடன் ஒத்துப்போகிறதா என்பதை கணக்கிட்டு அவருக்கு வரி விதிக்கும். அவ்வளவுதான்.
சிலர் குறைவான தொகை வருவாயாகக் காட்டி, வரி விலக்குப் பெற்றுத் தப்பித்துக் கொள்ளுவதிலிருந்து தடுக்க இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.