ஹிமாசலில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சம்!
ஹிமாசலப் பிரதேசத்தின் தரம்சாலா பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி..
ஹிமாசலப் பிரதேசத்தின் தரம்சாலா பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஜூன் 5 இரவு 10 மணியளவில் ரிக்கரில் 5.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டன. இதன் மையம் தரம்சாலாவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், காங்ரா-சம்பா எல்லைப் பகுதியில் உள்ள தௌலாதர் மலைத்தொடரில், தார் கடோய், ஆர்.எஃப். குக்டி ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அன்றிரவு மேலும் இரண்டு நில அதிர்வுகள் பதிவாகின.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 22.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதன் அதிர்வுகள் காங்ரா, சம்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உணரப்பட்டன.
Advertisement
Advertisement
மக்கள் வலுவான அதிர்வுகளை உணர்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அன்றைய தினம் முன்னதாகவே நில அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியிருந்தன.
இதையடுத்து நேற்று காலை 8.52 மணிக்கு, தரம்சாலாவிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தௌலாதர் மலைத்தொடரின் மின்கியானி கணவாய் அருகே 2.3 ரிக்டர் அளவுள்ள லேசான நிலநடுக்கம் பதிவானது.
இரவு 11.03 மணிக்குத் தரம்சாலாவிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் 2.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து இரவு 11.52 மணிக்கு நகருக்கு அருகில் உள்ள ஆர்.எஃப். ஹிலாங் பகுதியில் (சுமார் 23 கி.மீ தொலைவில்) 3.0 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கமும் ஏற்பட்டன. அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
தரம்சாலா அமைந்துள்ள காங்ரா மாவட்டம், இந்தியாவில் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள நிலநடுக்க மண்டலம்-5பிரிவின் கீழ் வருகிறது.
3 முதல் 4 ரிக்டர் வரையிலான நிலநடுக்கங்கள் பொதுவாகச் சிறியவையாகக் கருதப்படுகின்றன; இவை பெரும்பாலும் மக்களால் உணரப்பட்டாலும், கட்டடங்களுக்குப் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்துவது அரிது.
1905-ஆம் ஆண்டு காங்ராவில் ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் கணிக்கப்பட்ட நிலநடுக்கம், அப்பகுதி முழுவதும் 20,000-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டடங்களையும் தரைமட்டமாக்கியது நினைவுகூரத்தக்கது.