ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை
ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு மர்ம நபரிடமிருந்து வந்த கொலை மிரட்டல் அழைப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு மர்ம நபரிடமிருந்து வந்த கொலை மிரட்டல் அழைப்பு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சரின் மகன் தனஞ்சய் சிங். இவருக்கு தொலைபேசி மூலம் மர்ம நபரிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக தனஞ்சய் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் கிம்சர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி கிம்சரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அழைத்தவர் முதலில் தனஞ்சய் சிங்கின் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளார். பிறகு, அவர் ஜெய்ப்பூருக்குச் செல்லும் திட்டம் குறித்துக் கேட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இரண்டு நாட்களுக்குப் பிறகு அங்கு நடக்கும் கூட்டமொன்றில் பங்கேற்கப் போவதாக தனஞ்சய் சிங் கூறியுள்ளார். அதனைக் கேட்ட அந்த நபர் கவனமாக இருக்குமாறு எச்சரித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழைத்தவர் விபரம் குறித்து கேட்க முயன்றபோது, கவனமாக இரு நான் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று அந்த நபர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், தனது சமூகஊடகக் கணக்குகள் மூலமாகவும் தனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக தனஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.