பாறையிலிருந்து தவறி விழுந்த இந்திய ராணுவ வீரர் பலி!
ராணுவ நடவடிக்கையின் போது, பாறையிலிருந்து தவறி கீழே விழுந்த இந்திய ராணுவர் பலியான சம்பவம் பற்றி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் போது, பாறையிலிருந்து தவறி கீழே விழுந்த இந்திய ராணுவர் ஒருவர் பலியானார்.
ராஜௌரி மாவட்டத்தில் உள்ள கம்பீர் முகலான் - டோரிமல் பகுதியில், 'ஆபரேஷன் ஷெருவாலி' என்ற ராணுவ நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கரடுமுரடான மற்றும் சவாலான மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்த வீரர், கால் இடறி ஒரு பாறைச் சரிவிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கம்பீர் முகலான் - டோரிமல் பகுதிகளின் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் 'ஆபரேஷன் ஷெருவாலி' நடவடிக்கையானது, 16 ஆவது நாளாகத் தொடர்கிறது. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகளை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், பலியான ராணுவ வீரர் குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.