எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தது பற்றி...
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன.
கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கு எதிரான அணி, மாநில சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியையும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.
Advertisement
Advertisement
மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக 58 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால், பேரவைத் தலைவர் அவரை அங்கீகரித்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான சுகேந்து சேகர் ராய் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அந்த கடிதத்தில், “ஊழல் குற்றச்சாட்டுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கல்வி, சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட துறைகளில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துள்ளனர்.
ஆகையால், மக்களின் தீர்ப்பை ஏற்று, மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், திரிணமூல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.