திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!
திரிணமூல் காங்கிரஸில் பிளவு? மத்திய அமைச்சர் இல்லத்தில் அதிருப்தி எம்.பி.க்கள் ஆலோசனை!
புது தில்லி : திரிணமூல் காங்கிரஸில் உள்ள அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் மத்திய அமைச்சர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை முன்னெடுத்து மக்களவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தமுள்ள 29 எம்.பி.க்களில் 20 பேர் காய் நகர்த்தி வருகின்றனர். அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜிக்கும் பொதுச்செயலரும் மமதாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கும் எதிராக அதிருப்தி எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில், தில்லியில் இன்று (ஜூன் 8) ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்பட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ள இதேநாளில் தில்லியில், மத்திய அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவின் இல்லத்தில் திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதுடன் தமது மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்த சுகேந்து சேகர் ராயும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Advertisement
Advertisement
அதிருப்தி எம்.பி.க்கள் குழுவை பாராசாத் மக்களவைத் தொகுதி எம்.பி. காகோலி கோஷ் தாஸ்டிதார் வழிநடத்துவார் என்று இன்றைய கூட்டம் பற்றிய தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில், மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் கொறடா பொறுப்பிலிருந்து தாஸ்டிதார் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் சுவேந்த் அதிகாரியும் தில்லி கூட்டத்துக்கு வருகை தந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் சமீபத்திய பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்து ஆட்சியை திரிணமூல் காங்கிரஸ் இழந்த பின், அடுத்தடுத்து நடைபெறும் நகர்வுகள் மமதாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
திரிணமூல் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர், கட்சித் தலைமையுடனான அதிருப்தி காரணமாக தலைமையின் விருப்பத்தை மீறி பேரவையில் ரிதாபிரதா பானர்ஜி தலைமையில் செயல்பட முடிவெடுத்துள்ளனர். இதனிடையே, அக்கட்சி எம்.பி.க்களும் பாஜக சார்புநிலைக்குச் செல்வதால் அம்மாநிலத்தில் கடந்த 2011 தொடங்கி 2026 வரை 15 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக கோலோச்சிய திரிணமூல் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தியுள்ளன.