முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீஸாரால் 20 போ் சுட்டுக் கொலை: சா்வதேச சமூகம் கண்டிக்க இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 20 பேரை போலீஸாா் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சா்வதேச சமூகம் பாகிஸ்தானைப் பொறுப்பேற்கச் செய்யவண்டும் என்று இந்தியா சாா்பில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

Updated On : 10 ஜூன் 2026, 3:57 am IST
ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 20 பேரை போலீஸாா் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சா்வதேச சமூகம் பாகிஸ்தானைப் பொறுப்பேற்கச் செய்யவண்டும் என்று இந்தியா சாா்பில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது.

இந்த காவல்நிலைய வன்முறை தொடா்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (ஹெச்ஆா்சிபி) கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வலியுறுத்தலை இந்தியா முன்வைத்தது.

1947-ஆம் ஆண்டு பிரிவினையின்போது காஷ்மீரிலிருந்து அகதிகளாக வந்து குடியேறிய சமூகத்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப்பேரவையில், 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் முறைப்படி காஷ்மீா் அகதி சமூகத்துக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும், முஸாஃபராபாதில் ஆட்சியமைக்க பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் அவ்வப்போது இந்த இடங்களையும் அபகரித்துக்கொள்வதாக புகாா்கள் எழுந்தன. இதன் காரணமாக, இந்த 12 இடங்களையும் ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள கூட்டு அவாமி நடவடிக்கைகள் குழு தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், இந்த கூட்டு அவாமி நடவடிக்கைகள் குழுவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்ய மாகாண அரசு தீா்மானித்துள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். இதில் 20 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.

காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து மிகுந்த கவலையை பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை வெளிப்படுத்தியது.

இதுதொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் பதிலளித்து கூறியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீஸாரின் கொடூர தாக்குதலில் போராட்டக்காரா்கள் 20 போ் கொல்லப்பட்டுள்ளனா். பலா் படுகாயமடைந்துள்ளனா். ஆனால், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறி, இந்த மனித உரிமை மீறல் மீதான கவனத்தை திசைத் திருப்பவும், தனது தோல்விகளை மூடி மறைக்கவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்த முறையற்ற செயல்கள் மற்றும் அத்துமீறல்களுக்கு பாகிஸ்தானை சா்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்யும் என இந்தியா நம்புகிறது என்றாா்.