கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்
கேரளம் : ‘பிரியதர்ஷிணி’ திட்டத்தின்கீழ் அரசுப் பேருந்துகளில் ஜூன் 15 முதல் மகளிர் இலவசமாகச் செல்லலாம்...
திருவனந்தபுரம் : கேரளத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் வரும் ஜூன் 15-இல் தொடக்கி வைக்கப்பட உள்ளது.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யு.டி.எஃப்.) ஐந்து முக்கிய வாக்குறுதிகளுள் ஒன்றாக ‘பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கேரள அரசுப் பேருந்துகளில், ‘சாதாரண கட்டணப் பேருந்து (ஆர்டினரி)’ சேவைகளில் ஜூன் 15 முதல் பெண்கள் இலவசமாகச் செல்லலாம் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, தமது தலைமையில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற மாநில அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய கேரள முதல்வர் வி. டி. சதீசன், “‘பிரியதர்ஷிணி’ என்ற பெயரிலான இத்திட்டத்தால் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ. 60 ஆயிரத்துக்கும் மேல், ஆண்டுக்கு ரூ. 800 கோடிக்கும் மேல் செலவு ஏற்படும். இந்தச் செலவை அரசே ஏற்கும்.
Advertisement
Advertisement
அனைத்து வயது பெண்களும், குறைந்த வருவாய் ஈட்டுவோர், அதிக வருவாய் ஈட்டுவோர் போன்ற பொருளாதாரப் பேதமின்றி அனைத்து தரப்பு பெண்களும், அத்துடன் மூன்றாம் பாலினத்தவர்களும் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்க தகுதியானவர்கள். கே.எஸ்.ஆர்.டி.சி.-க்கு அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ. 1,500 கோடியை சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தேவைகளுக்காக வழங்குகிறது. இந்நிலையில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ. 1,500 கோடியுடன் கூடுதலாக ரூ. 800 கோடி அரசால் வழங்கப்படும்.
இது, இத்திட்டத்தின் முதல் கட்டம் மட்டுமே. கே.எஸ்.ஆர்.டி.சி. வருவாயைப் பெருக்க அடுத்த 6 மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அது நிறைவேறியதும், நாம் இத்திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து கவனத்தில் கொள்ளலாம்” என்றார்.