கரப்பான்பூச்சி கட்சி போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை பணியிடை நீக்கம்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதால் ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டது பற்றி...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியை ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சில நாள்களுக்குப் பிறகு, ஹரியாணா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வேலை செய்து வந்த விருந்துநிலை ஆசிரியை சுலேகா தலால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஆசிரியை சுலேகா தலால், "இது ஒரு போராட்டம்; இம்முறை இது வாழ்வா சாவா போராட்டம். இப்போது கரப்பான்பூச்சியின் தாய் களத்தில் இறங்கிவிட்டாள். நாம் நம் பிள்ளைகளுடன் இருக்கிறோம்” என்று ஆவேசமாகப் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, ஆசிரியை சுலேகா தலால்-ஐ ஜூன் 8 முதல் இடைநீக்கம் செய்வதற்கான உத்தரவை ரோத்தக் மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்தார். இருப்பினும், அந்த உத்தரவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் நடைபெற்ற குளறுபடிகள் போன்றவற்றைக் காரணம் காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 7,000 மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் அவர்கள் வைத்த கோரிக்கைகள் அரசியல் களத்தில் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.