திரிணமூல் பலம் குறைகிறதா? ஒரே வாரத்தில் 3-வது எம்.பி. ராஜிநாமா!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிக் பராய்க் ராஜிநாமா செய்தது பற்றி...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை எம்.பி. பிரகாஷ் சிக் பராய்க் வியாழக்கிழமை (ஜூன் 11) ராஜிநாமா செய்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் திங்கள்கிழமை (ஜூன் 8) கடிதம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர். இந்த வரிசையில், பிரகாஷ் சிக் பராய்க் தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள். சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ததோடு கட்சியிலிருந்தும் விலகினர். ஆகையால், இதுவரை ராஜிநாமா செய்த திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.