போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் உயிரிழப்பு!
போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பற்றி...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி என்னும் பகுதியில் உள்ள பழங்குடியினர் மருத்துவமனையிலிருந்து திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதமானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அட்டப்பாடியில் உள்ள வலமாரி ஊரைச் சேர்ந்த சஜீவ் குமார் (25) என அடையாளம் காணப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த சஜீவ் குமார் என்னும் இளைஞர் தீவிர காய்ச்சல் காரணமாக அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆம்புலன்ஸுல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அட்டப்பாடி மலைப்பாதையில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது. இருப்பினும், மருத்துவமனையை அடையும் போது குமாரின் நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.