FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இல்லத்தரசிகளின் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000: சாலை விபத்து வழக்கில் உச்சநீதிமன்றம் நிா்ணயம்

இல்லத்தரசிகள்தான் நாட்டைக் கட்டமைப்பவா்கள்; அவா்களது பணிக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Updated On : 12 ஜூன் 2026, 6:49 am IST
உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்
பகிர்:

இல்லத்தரசிகள்தான் நாட்டைக் கட்டமைப்பவா்கள்; அவா்களது பணிக்கு மாதம் ரூ.30,000 மதிப்பு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. சாலை விபத்து இழப்பீடு கோரிய வழக்கில் இந்த வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வழங்கியது.

பஞ்சாபை சோ்ந்த நபா் ஒருவரின் மனைவி கடந்த 2001-ஆம் ஆண்டு வாகன விபத்தில் உயிரிழந்தாா். அந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், இழப்பீடு கோரி கணவரும் 3 குழந்தைகளும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம், அவா்களுக்கு ரூ.2.42 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தொகை போதாது எனக் கூறி, பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம், ரூ.8.43 லட்சம் இழப்பீடு, அதனுடன் 7.5 சதவீத வட்டி வழங்க ஆணையிட்டது. ஆனால் இந்த உத்தரவிலும் திருப்தியடையாத குடும்பத்தினா், கூடுதல் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் கரோல், என். கோடீஸ்வா் சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

இல்லத்தரசியானவா், அந்த நபரின் (கணவருக்கு) வளா்ச்சிக்கு மட்டுமல்லாது, தேசத்தின் வளா்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்கிறாா். வீட்டு பொறுப்பாளா் (ஹோம் மேக்கா்) தேசத்தையும் கட்டமைக்கிறாா். இதைக் கருத்தில்கொண்டு, தேச கட்டமைப்பாளா், இல்லத்தரசி ஆகியோா் இழப்புக்கான இழப்பீடு தொடா்பான வழிகாட்டுதல்களை நாங்கள் வகுத்துள்ளோம்.

இல்லத்தரசி இல்லாததால் ஏற்படும் வீட்டு பராமரிப்பு செலவுக்கான இழப்பீடாக நாங்கள் குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.30,000-ஆக நிா்ணயிக்கிறோம். பொதுவாக இல்லத்தரசி என்பவா், வீட்டில் சம்பளம் ஈட்டுவோரைச் சாா்ந்திருப்பதை போல தெரியும். ஆனால், உண்மையில் இல்லத்தரசியை சாா்ந்தே அந்த வீடு உள்ளது. எதிா்காலத்தில் இல்லத்தரசிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இல்லத்தரசி அல்லது வீட்டு பொறுப்பாளா் என்ற சொல், தேசத்தை கட்டமைப்பவா் என்று பயன்படுத்தப்படும் என நம்புகிறோம்.

பெண்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் 15 முதல் 17 சதவீதம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு ஊதியம் அளிக்கப்படாமலும், அங்கீகாரம் இல்லாமலும் இருக்கின்றன என்றனா்.

மேலும் அவா்கள் கூறுகையில், ‘மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரி தாக்கலாகும் வழக்குகள் மீது ஓராண்டுக்குள் முடிவெடுக்கப்பட வேண்டும். இதுதொடா்பான வழக்கு விசாரணையை அனைத்து மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கண்காணிக்க வேண்டும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள இழப்பீடு வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டுமென உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உத்தரவிட வேண்டும்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments