17 ஆண்டுகளாகத் தேடப்பட்ட வங்கதேசத்தவர் உ.பி.யில் கைது!
பலஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக..
கடந்த 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரும் ரூ. 25 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்டுவந்த வங்கதேசத்தவரை, சஹாரன்பூர் காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கூட்டு முயற்சியில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கிப் பணியாற்றும் நோக்கத்துடன் பல வங்கதேச நாட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறி, உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் 8, 2009 அன்று புகார் அளித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக குதுப்ஷெர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மூவர் தண்டிக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்திருந்த ஜாஹித் 2009-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்ததாகக் காவல்துறை கூறியது. அவருக்கு எதிராக நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளையும் பிறப்பித்திருந்தது.
Advertisement
Advertisement
சஹாரன்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்கின் உத்தரவின் பேரில், சில்கானா காவல் நிலையப் பொறுப்பாளர் வினோத் குமார், ஏடிஎஸ் சஹாரன்பூர் பிரிவுப் பொறுப்பாளர் சுதிர் குமார் உஜ்வால் ஆகியோர் தலைமையிலான கூட்டுப்படையினர் ஜாஹித் என்பவரை உ.பி.யின் சைஃபான் புலியா அருகே கைது செய்யப்பட்டது.
சோதனையின்போது, ஆதார் அட்டை, சந்தேகத்திற்குரிய பிற ஆவணங்களின் புகைப்படங்கள் அடங்கிய அலைபேசி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
2009-ஆம் ஆண்டு முதல் காவல்துறை, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க ஜாஹித் பல்வேறு மாநிலங்களில் பதுங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மியான்மர், வங்கதேசம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் அவர் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தங்கியிருக்கக்கூடிய அவரது மற்ற கூட்டாளிகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.