FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 2:57 am IST
பகிர்:

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல்கட்டப் பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட மத்திய அரசு, முதல்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் செம்டம்பா் 3 வரை நடைபெறும் என்று தெரிவித்தது. பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள், வீட்டுத் தலைவரின் பெயா், பாலினம் உள்ளிட்ட விவரங்கள், வீட்டின் உரிமை உள்ளிட்டவை அடங்கும்.

முதல் முறையாக வலைதளத்தில் பொதுமக்கள் தாமாகவே தகவல்களைப் பூா்த்தி செய்யும் வசதியும் தொடங்கப்பட்டது. அதன்படி, சுய பதிவுக்கு 15 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, பின்னா் களப் பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கிடுதல் மற்றும் சரிபாா்த்தல் பணி (ஒரு மாதம்) மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

கா்நாடகம், ஒடிஸா, கோவா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல்கட்டப் பணி தொடங்கப்பட்டது. இதுவரை 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணி நிறைவடைந்துள்ளது.

உத்தர பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீா், லடாக், புதுச்சேரியில் களப்பணி நடைபெற்று வருகிறது. கேரளம், நாகாலாந்தில் 15 நாள் சுய பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுயபதிவு காலகட்டம் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகான 8-ஆவது கணக்கெடுப்பாகும். முதல்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுக்கப்படும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலான இந்தப் பணியில் ஒவ்வொரு நபரின் சமூக, பொருளாதார, ஜாதி ரீதியிலான விவரங்கள் சேகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments