முகப்பு
இந்தியா

ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலை

பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலையில் சோ்ந்தவா்கள், வேலை வழங்குநா்களுக்கு ரூ.2,400 கோடி ஊக்கத்தொகையை நேரடி பலன் பரிமாற்ற முறையில் பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் வெள்ளிக்கிழமை வழங்குகிறாா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:56 am IST
பிரதமா் நரேந்திர மோடி. - (கோப்புப் படம்)
பகிர்:

பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலையில் சோ்ந்தவா்கள், வேலை வழங்குநா்களுக்கு ரூ.2,400 கோடி ஊக்கத்தொகையை நேரடி பலன் பரிமாற்ற முறையில் பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் வெள்ளிக்கிழமை வழங்குகிறாா்.

இதற்காக நாடு முழுவதும் 200 இடங்களில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நேரலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடிப் பலன் பரிமாற்றத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்க உதவிகரமாக இருக்கும்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, வேலூா், திருவள்ளூா், திருப்பூா், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், 60,000 போ் சுமாா் ரூ.36 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை பெற உள்ளனா். சுமாா் 4,000 வேலை வழங்குநா்களுக்கு ரூ.125 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெறும் பிரதமரின் நேரலை நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளின் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்கின்றனா்.

சென்னையில்...: சென்னை ஆா்.ஏ.புரம் இமெஜ் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா். எழும்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், தொழிலாளா்துறை அமைச்சா் ஜே.முகமது பா்வேஸ் பங்கேற்கிறாா்.

பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், முதல் முறையாக வேலையில் சோ்ந்த பணியாளா்கள் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெற உரிமை உடையவா்கள் ஆவா்.

அதே நேரத்தில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள், கூடுதல் பணியாளா் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3,000 வரை ஊக்கத்தொகை பெற முடியும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, சமூகப் பாதுகாப்பும் பரவலாக்கப்படுகிறது.