பணமுறைகேடு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ.132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீடு, கண்ணூா் மாவட்டத்தில் அவருக்கு சொந்தமான வீடு, உறவினா் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும், கொச்சியில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி வீணாவிடம் அமலாக்கத் துறையினா் 9 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டனா். அவரது வங்கி லாக்கரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, ஜூன் 29-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி, வீணாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் வீணா தவிர குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் நால்வரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீணா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களின் வாக்குமூலங்கள், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.