FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 24 ஜூலை 2026, 1:53 am IST
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
பகிர்:

முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தாா். அப்போது, அவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.07 கோடி சொத்து சோ்த்தாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீது ஊழல் ஒழிப்பு போலீஸாா் கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2025-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை நிராகரித்து கடந்த 2025 டிச. 11-இல் தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், மதுரை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத் துறை புகாரை இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிந்து வழக்குரைஞா்களின் இறுதிவாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணையை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுவது தவறான அணுகுமுறை என வாதிட்டாா்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாா்த், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுப்பது குறித்த நடைமுறை தொடங்கியுள்ளது. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த நடைமுறை தடுக்கப்படுவதாக வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments