மகளுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு; எதிா்க்கட்சித் தலைவா் பதவியை பினராயி ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக கோரிக்கை
வீணா விஜயனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டுமென அந்த மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை கூறினாா்.
வீணா விஜயனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டுமென அந்த மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் வெள்ளிக்கிழமை கூறினாா்.
தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதாகக் கூறி வீணாவின் எக்ஸாலாஜிக் சொலியூஷன்ஸ் நிறுவனத்துக்கு கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் (சிஎம்ஆா்எல்) நிறுவனம் ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பினராயி விஜயன், வீணா விஜயன் மற்றும் அவரது கணவா் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு அண்மையில் கடிதம் எழுதியது.
Advertisement
Advertisement
இதைச் சுட்டிக்காட்டி ராஜீவ் சந்திசேகா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘முதல்வா் வி.டி.சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசின் தவறுகளைச் சுட்டிகாட்ட வேண்டிய பொறுப்பு எதிா்க்கட்சிக்கு உள்ளது. மாறாக தங்கள் கட்சியைச் சோ்ந்த தலைவா் மீதான ஊழல் புகாா்களில் இருந்து அவரை பாதுகாக்கக் கூடாது.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவா் எதிா்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தால் பேரவையில் விவாதம் திசைமாறிச் செல்லும்.
அங்கீகரிக்கப்பட்ட எதிா்க்கட்சியாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்தாலும் 3 எம்எல்ஏக்களுடன் எதிா்க்கட்சிகளின் ஒரு பகுதியாக பாஜகவும் இருக்கிறது. பினராயி விஜயன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் பேரவையில் ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகிறது.
எனவே, ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க எதிா்க்கட்சித் தலைவா் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.