FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சரின் மகன்கள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை உறுதி

மறைந்த முன்னாள் திமுக அமைச்சா் செங்குட்டுவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது மகன் உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

மறைந்த முன்னாள் திமுக அமைச்சா் செங்குட்டுவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது மகன் உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் மருங்காபுரி எம்எல்ஏவாக இருந்த பி.எம்.செங்குட்டுவன் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக, செங்குட்டுவன் அவரது மகன்கள் எஸ்.பன்னீா்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை திருச்சி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த நிலையில், செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோா் இறந்துவிட்டதால் அவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கைவிட்டது. மேலும், செங்குட்டுவனின் மகன்கள், மகள் மற்றும் சகோதரரின் மகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து 2023-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இந்தத் தீா்ப்பை எதிா்த்து எஸ்.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனா்.

வாதங்கள் நிறைவடைந்த தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments