மகாராஷ்டிரம்: விவசாயக் கடன் தள்ளுபடி கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்!
விவசாயக் கடன் தள்ளுபடி கோரி மகாராஷ்டிர பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் பற்றி..
மகாராஷ்டிரத்தில் பருவமழைக் காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், குறைந்த தொழில்நுட்ப நிபந்தனைகளுடன் கூடிய முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை வலியுறுத்தி, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
சிவசேனா எம்எல்ஏக்கள் ஆதித்யா தாக்கரே, அம்பதாஸ் தான்வே மற்றும் காங்கிரஸ் கட்சியின் சதேஜ் பாட்டீல் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மாநில அரசு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது; ஆனால், இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகள் தகுதியுள்ள பல பயனாளிகளை இதில் சேர்க்காமல் செய்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
Advertisement
Advertisement
இத்திட்டத்தில் உள்ள "கடுமையான" நிபந்தனைகளை நீக்கக் கோரியும், விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற முழுமையான கடன் தள்ளுபடியை வலியுறுத்தியும் என்சிபி (எஸ்பி) எம்எல்ஏ ரோஹித் பவார் இம்மாத த் தொடக்கத்தில் போராட்டம் நடத்தினார்.
ஜூன் 2 அன்று மகாராஷ்டிர அமைச்சரவை ரூ. 36,585 கோடி மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் சுமார் 56 லட்சம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புண்யஷ்லோக் அகில்யாதேவி ஹோல்கர் ஷேத்காரி கர்ஜா-முக்தி யோஜனா' எனப்படும் இத்திட்டம், ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்கிறது.
இத்திட்டம் கடன் தள்ளுபடி, ஒருமுறை தீர்வு காணும் திட்டம் மற்றும் ஊக்கத்தொகை நன்மைகள் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும், தகுதிக்கு நில உடைமை தொடர்பான நிபந்தனைகள் எதுவும் இல்லை.
கடன் தள்ளுபடிப் பிரிவின் கீழ், அசல் மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ. 2 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள குறுகிய காலப் பயிர்க் கடன்களைக் கொண்ட விவசாயிகள் முழுமையான கடன் நிவாரணம் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இக்கடன்கள் ஏப்ரல் 1, 2019 மற்றும் மார்ச் 31, 2025 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும், செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி நிலுவையில் இருந்திருக்க வேண்டும், மார்ச் 31, 2026 வரை திருப்பிச் செலுத்தப்படாமல் இருந்திருக்க வேண்டும். அத்தகைய கடன் பெற்றவர்கள் ரூ. 2 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அதன்பிறகு அவர்கள் ரூ. 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடிக்குத் தகுதி பெறுவார்கள்.
நிலுவைத் தொகையில் தங்கள் பங்கைச் செலுத்துவதற்கு அவர்களுக்கு மார்ச் 31, 2027 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
Ahead of the monsoon session, Opposition parties staged a protest on the steps of the Maharashtra legislature complex here on Monday against the Devendra Fadnavis-led government, demanding a complete farm loan waiver with minimal technical conditions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.