மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி! எங்கே?
மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டை நீக்கப்பட்டது பற்றி...
கொல்கத்தா மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பை இஸ்கான் அமைப்பிடம் மேற்கு வங்க அரசு ஒப்படைத்திருக்கும் நிலையில், இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் முதல்முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது பேசிய நிதித்துறை அமைச்சர் ஸ்வபன் தாஸ்குப்தா, ”அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கான மூலப்பொருள் செலவு, ஒருவருக்கு ரூ. 6.78-லிருந்து ரூ. 10 ஆக உயர்த்தப்படும். கொல்கத்தா மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் உணவு வழங்கும் ஒப்பந்தம் இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்” என்று அறிவித்தார்.
இதுதொடர்பான அறிவிப்பு வெளியான மறுநாளே, மதிய உணவுத் திட்டம் முழுமையாக சைவமாக மாறுகிறது என்றும், இனி முட்டைக்கு பதிலாக பன்னீர் மற்றும் ராஜ்மா போன்றவை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதர்கு திரிணமூல் காங்கிரஸின் மூத்த எம்பி டெரிக் ஓ பிரையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தேர்தல் பிரசாரத்தில் மீன் சாப்பிட்டவர்கள், தற்போது குஜராத் ஜிம்கானாவை வெளிப்படுத்துகிறார்கள். எதிரிகள் மீது முட்டை வீசிகிறார்கள், ஆனால், மதிய உணவில் முட்டைகளை நீக்கி, குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பறிக்கிறார்கள். சைவ உணவைத் திணிக்கிறார்கள். மேற்கு வங்கம் இதை நிராகரிக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.
திரிணமூல் அதிருப்தி எம்.எல்.ஏ.வும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ரிதப்ரதா பானர்ஜி, “புரதச்சத்தை பொறுத்தவரை, முட்டை ஒரு முக்கியமான புரதமாக இருப்பதால், மதிய உணவிலிருந்து அதை நீக்குவது சரியல்ல. மேற்கு வங்க மக்கள் பாரம்பரியமாக அசைவ உணவை உட்கொள்கின்றனர். இவற்றை நீக்கினால் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் நிலை ஏற்படும். இது வங்கத்தின் உணவுப் பழக்கவழக்கங்களுக்குப் பொருந்தாது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ், மதிய உணவுத் திட்டத்தின் உணவுப் பட்டியல் மாற்றம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முட்டையும் சிக்கனும்
மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 300 கலோரிகள் மற்றும் 8 - 12 கிராம் புரதச்சத்தைக் கொண்ட சமைத்த உணவு வழங்கப்படுகிறது.
வாரத்தில் 5 நாள்கள் சாதத்துடன் பருப்பு, உருளைக் கிழங்கும், ஒரு நாள் முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றன.
பல பள்ளிகளில் ஆசிரியர்களின் சொந்த முயற்சியால் நிதி திரட்டி, மாணவர்களுக்கு சிக்கன் மற்றும் மீன் வகை உணவுகளையும் அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், முட்டைக்கு மாற்றாக புரதச்சத்துக்காக பன்னீர், ராஜ்மா, சோயாபீன்ஸ், கிச்சடி போன்ற முழு சைவ உணவு வகையை இஸ்கான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Eggs removed from the midday meal scheme - Students shocked - Where?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.