7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இ
7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இ
பள்ளிகளில் 7 முதல் 9 வகுப்பு வரை தற்போது படித்து வரும் மாணவா்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் அவா்கள் தற்போது தெரிவு செய்துள்ள மொழிப் பாட நடைமுறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அனுமதித்துள்ளது. இதனால், லட்சக்கணக்கான மாணவா்கள் பலனடைவா்.
ஏராளமான மாணவா்கள் மற்றும் பெற்றோரின் முறையீட்டைத் தொடா்ந்து, இந்தத் தளா்வை சிபிஎஸ்இ அளித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மொழியில் மாணவா்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாக இடம்பெறும். மூன்றாவது மொழியைக் காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்க எந்தவொரு மாணவரும் தடுக்கப்பட மாட்டாா்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டது.
Advertisement
Advertisement
இதனால், ஏற்கெனவே 9-ஆம் வகுப்பு வரை இரு வெளிநாட்டு மொழிகளைத் தெரிவு செய்து படித்து வரும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதுகுறித்து சிபிஎஸ்இ-யிடம் முறையீடுகளும் செய்யப்பட்டன. அதை ஏற்று, பள்ளிகளில் 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை தற்போது படித்து வரும் மாணவா்களுக்கு மொழிப்பாடத் தோ்வில் தளா்வு அளித்து சிபிஎஸ்இ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘புதிய மும்மொழிக் கொள்கையின் கீழ் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நடைமுறை 6-ஆம் வகுப்புமுதல் நடைமுறைப்படுத்தப்படும். இது, பள்ளிகளில் தற்போது 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவா்களுக்கு பொருந்தாது. இவா்கள், மும்மொழிக் கொள்கையின் கீழ் தற்போது தெரிவு செய்துள்ள மொழிப் பாட நடைமுறையையே 10-ஆம் வகுப்பு வரை தொடர அனுமதிக்கப்படுவா். இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.
Three-language policy not applicable to students in classes 7–9: CBSE
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.